மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம் ஜனவரியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரங்கம் 10,000 பேர் அமரும் வகையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. 66 ஏக்கரில் அமைந்துள்ள இந்த திடலில் அடுத்தாண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் வகையில் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டு அரங்கத்தில் வாடிவாசல், மாடுபிடி வீரர்களின் பரிசோதனை கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் காத்திருக்கும் அறை, காளைகள் காத்திருப்பு கூடம், தற்காலிக விற்பனை கூடங்கள், கால்நடை மருத்துவமனை, பொருள் பாதுகாப்பு அறை, செயற்கை நீரூற்று, புல் தரைகள், மற்றும் தங்கும் அறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
ஜல்லிக்கட்டு அரங்கம் திறக்கப்படும் போது, அதைப் பார்வையிடத் தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.