அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நிருபர்களிடமிருந்து அதிமுக -பாஜக கூட்டணி குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்கு எடப்பாடி அவர்கள், ” பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை எனத் தெளிவாகக் கூறிவிட்டேன், 2 கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், அவர் கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது பல தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வியடைந்துள்ளது . கூட்டணி தொடர வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியது அவரது சொந்தக் கருத்து, அதுக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என ‘பொறுத்திருந்து பாருங்கள்”’ என அதிரடியாகப் பதிலளித்தார்.
அதேசமயம், இந்த பேட்டியில் எடப்பாடி அவர்கள், “பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் எங்களது தெளிவான நிலைப்பாடு. பாஜக அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக்க வேண்டும் என பாஜக எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை;.அண்ணாமலையை மாநில பாஜக தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என நாங்களும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” எனத் திட்டவட்டமாகக் கூறினார்