தமிழகத்தின் 32 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், அந்தமானின் தென் கடலோர வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. மேலும் மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் அக்டோபர் 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அக்டோபர் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது 24-ந்தேதி ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளது. 24 ஆம் தேதிக்குள் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு வங்கக் கடலில் சூறாவளி புயல் உருவாகும். பின்னர் அது 25 ஆம் தேதிக்குள் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.”
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். , ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.