முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ். பன்னீர் செல்வம் அவர்களும் மற்றும் திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களும் நேற்று (மே 8) அமமுக கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் அடையார் இல்லத்தில் திடீரென சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பில் அரசியல் நகர்வு மற்றும் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன், தினகரன் ஆகியோர் ஆலோசனை நடத்திய பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அதில் தினகரன் அவர்கள், ”எனக்கும் ஓபிஎஸ்-க்கும் எந்த பகையும் கிடையாது, சில காரணங்களால் பிரிந்து இருந்தோம் என்றும், தற்போது ஓபிஎஸ் கரங்களை பிடித்து இருட்டில் கூட நடக்கலாம்; அதிமுகவை மீட்டு எடுக்கும் முயற்சியில் நானும் ஓபிஎஸ்-ம் ஈடுபடுவோம்” என்றார்.
மேலும், அவர் சசிகலாவை சந்திப்பதில் எந்த பிரச்னையும் இல்லை, கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் எனவும், எங்களிடம் உள்ள சிலீப்பர் செல்கள் எங்களுக்கு தேவையான தகவல்களை தருவார்கள் என்றார்