வங்காள விரிகுடாவில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நவம்பர் 19ஆம் தேதி முதல் கனமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக் கடலில் நவம்பர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று (நவம்பர் 14) நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து தற்போது குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது.
தெற்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில், நாளை (நவம்பர் 16ம் தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.