திருச்சி மாவட்டம் அருகே தாளக்குடி ஊராட்சி மருதமுத்து நகரை சேர்ந்தவர் சேகர். இவரின் மனைவி மகாலட்சுமி.
இந்த தம்பதிகளுக்கு பிறந்த 2 வயது குழந்தையான சாய் தருண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு, உடலில் புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமி சாய் தருணுக்கு ‘நூடுல்ஸ்’ சமைத்து கொடுத்துவிட்டு, மீதமிருந்த ‘நூடுல்ஸை’ குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.
மறு நாள் காலை அந்த நூடுல்ஸை எடுத்து சாய்தருணுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சாய்தருண் அன்று மதியம் வரை வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளார்.
மாலை சாய்தருண் திடீரென வாந்தி எடுத்து, சுருண்டு கீழே விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி, சாய்தருணை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின் போலீசார் சாய்தருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். 2 வயது குழந்தை நூடுல்ஸ் சாப்பிட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.