கடந்த 90 களில் பிரபல முன்னணி நடிகையாக இருந்த நடிகை மீனா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உருவெடுத்த நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின் அவரது உடல்நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டதை அடுத்து நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பும் தீவிரமடைந்ததை அடுத்து வித்யாசாகர் உடல்நிலை மோசமானதாகவும், இதனை அடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு அவர் காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்ததை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சரத்குமார் இதுகுறித்து வெளியிட்ட இரங்கல் செய்தியில் திரைப்பட நடிகையும் எனது குடும்ப நண்பருமான மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் இறந்ததை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்றும், வித்யாசாகரை இழந்து வேதனையில் ஆழ்ந்து இருக்கும் மீனா, நைனிகா விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் தகனம் இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.