இந்தியாவில் இளைஞர் ஒருவர் இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் லோஹர்டகாவில் உள்ள பந்தா கிராமத்தில் வசித்து வருபவர் சந்தீப் ஓரான். இவரும் குசும் லக்ரா என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், சந்தீப் மேற்கு வங்கத்துக்கு செங்கல் சூளையில் வேலை செய்வதற்கு சென்றுள்ளார்.
அங்கு ஏற்கெனவே வேலை செய்துக்கொண்டிருக்கும் ஸ்வாதி குமாரி என்ற பெண்ணுடன் நட்பு ரீதியாக பழகிவந்துள்ளார். ஆனால் காலப்போக்கில் அது காதலாக மலர்ந்துள்ளது.
அங்கு ஸ்வாதி குமாரியுடன் தங்கியிருந்துள்ளார். இந்த விவகாரம் பந்தா கிராமவாசிகளுக்கு தெரிய வந்துள்ளது. அதனால் கிராமத்தில் சந்தீப் ஓரானுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஆனாலும், ஸ்வாதி குமாரியை கிராமத்துக்கு அழைத்து வந்துள்ளார்.
தொடர் சண்டைக்குப் பிறகு, கிராம மக்கள் பஞ்சாயத்து செய்து, சந்தீப் ஓரானை இரு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சந்தீப் ஓரானுக்கு ஏற்கெனவே திருமணமாகாமல் குழந்தை இருக்கிறது என்பதை அறிந்தும் ஸ்வாதி ஓரானை ஏற்றுக்கொண்டார்.
முதல் காதலி குசும் லக்ராவும் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டார். மேலும், கிராம மக்களின் முன்னிலையில் இரண்டு பெண்களின் சம்மதத்துடன் சந்தீப் ஓரான் திருமணம் செய்துக்கொண்டார்.
2 பெண்களை திருமணம் செய்துகொண்டது தொடர்பாக சந்தீப் கூறுகையில், இரு பெண்களை திருமணம் செய்துகொள்வது சட்டரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஆனால், நான் இருவரையும் காதலிக்கிறேன். இருவரையும் என்னால் விட முடியாது என கூறியுள்ளார்.