இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 25வது படமான ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகைக்குத் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில், தனது 25-வது படம் தீபாவளிக்கு வெளியாவதைக் கொண்டாடும் வகையில் 25,000 பேருக்கு அன்னதானம் வழங்க கார்த்தி ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, ரசிகர்கள் தினமும் ஆயிரம் பேர் வீதம் தொடர்ந்து 25 நாட்கள் உணவு வழங்க உள்ளனர்.
இந்த அன்னதானம் திட்டம், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, இந்த அன்னதானம் வழங்கும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள், கார்த்தி மக்கள் நல அறக்கட்டளையின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி தனது 25-வது படத்தின் வெற்றியை முன்னிட்டு இந்த அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அவரது இந்த நல்ல செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.