தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை மீனா. தென்னிந்திய சினிமாவின் அத்தனை டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.
டாப் ஹீரோயினாக இருந்த மீனா தற்போது பிரபலமான துணை நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார் மீனா.
இந்நிலையில் நேற்று மாலை அவரது கணவர் வித்யாசாகர் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார் வித்யாசாகர். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும் டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அவரது உடல்நிலை மோசமடைந்து, ஆபத்தான நிலைக்கு சென்றதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வித்யாசாகர் உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த திரைப்பிலங்களான ரஜினிகாந்த், சரத்குமார், பிரபுதேவா, ரம்பா, விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நேரிலும், சோஷியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் மீனாவை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய நிலையில், இன்று நேரில் வந்து வித்யாசாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.
மேலும் தமிழக அரசின் சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.வித்யாசாகருக்கும், மீனாவிற்கும் 2009 ம் ஆண்டு ஜுலை 12 ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்து 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளனர்.
அத்தோடு இவர்களின் திருமண நாளுக்கு இன்னும் 14 நாட்கள் தான் உள்ளது. இந்த சமயத்தில் இப்படி ஒரு தாங்க முடியாத சோகம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு திருமண நாளன்று, தங்களின் திருமண வரவேற்பு புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்த மீனா, நீங்கள் என் வாழ்க்கையில் வானவில் போல் வந்தீர்கள். நீங்கள் வந்த பிறகு வாழ்க்கையே கலர்ஃபுல்லாகி விட்டது என குறிப்பிட்டிருந்தார். மீனாவின் இந்த பழைய போஸ்ட்டை குறிப்பிட்டு ரசிகர்கள் பலர் சோகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.