நடிகர் அட்டகத்தி தினேஷ் ‘குக்கூ’ படத்தில் பார்வையற்றவராக நடித்ததால் அவருக்கு கண் பார்வை பறிபோனதாக இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.திரையுலகில் அறிமுகமாகும் இளம் நடிகர்கள், நடிப்பில் தங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கவும் ஆபத்தான வேடங்களில் கூட நடித்து வருகின்றனர். தனது முதல் படத்திலேயே திறமையான நடிப்பால் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார் அட்டகத்தி தினேஷ்.
கடந்த 2012ம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு இதை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு ஈ, எவனோ ஒருவன், ஆடுகளம், போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான முக்கியப் படங்களில் ஒன்றான ‘குக்கூ’வுக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என்று பலரும் கூறிய நிலையில், சில காரணங்களால் அவருக்கு அந்த விருது கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் பார்வையற்றவராக நடித்திருந்தார். அந்த கேரக்டரில் நடிப்பது தனக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தியதாகவும் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
இது குறித்து முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “குக்கூவில் பார்வையற்றவராக நடித்தார் அட்டகத்தி தினேஷ். படம் முழுவதும் குறிப்பிட்ட நிலையில் கண்களை ஊன்றி நடித்ததால், சில நாட்களில் பார்வை இழந்தார். சிகிச்சைகள் மூலம் அவர் பழைய நிலைக்கு திரும்பினார்.
திரைப்படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றுபவர் தினேஷ் என்றும் பா.ரஞ்சித் பாராட்டினார். தினேஷ் குறித்து பா.ரஞ்சித் கூறிய தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அட்டகத்தி தினேஷ் நடித்த திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, அண்ணனுக்கு ஜெய் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அட்டகத்தி தினேஷ் தற்போது ஜெய் பேபி, தீரும் போரும் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.