நடிகர் மன்சூர் அலிகானின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சரக்கு’ திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு கூல் சுரேஷ் வலுக்கட்டாயமாக மாலை அணிவித்த சம்பவம் அந்த நிகழ்ச்சி விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இந்த மாலை அணிவித்த காணொளி இணையத்தில் வெளியாகி கூல் சுரேஷ் எதிராக கடும் விமர்சனம் எழுந்தது
இந்நிலையில், கூல் சுரேஷை பளார்ன்னு அடிக்காமல் விட்டது வருத்தமாக உள்ளதாக, சம்பந்தப்பட்ட பெண் தொகுப்பாளர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கூல் சுரேஷ் கன்னத்தில் அறைஞ்சிருக்கணும்: சிம்புவின் ஆரம்பகால படங்களில் அவருக்கு நண்பனாக நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். தற்போது நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால், சினிமா ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டும் இல்லாமல், முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது, திரையரங்கிற்கு குதிரையில் சென்று அலப்பறை செய்வதே இவரது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், மன்சூர் அலிகான் நடித்துள்ள சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கூல் சுரேஷ், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளருக்கு திடீரென மாலை போட்டு வாழ்த்துத் தெரிவித்தார். “எல்லாருக்கும் மாலை போட்டீங்க, ஆனா நமக்காக அழகாக பேசி நிகழ்ச்சியை நடத்தும் இவங்கள மறந்துட்டீங்களே” எனக் கூறி மாலை போட்டது சர்ச்சையானது.
இதனை சற்றும் எதிர்பாராத பெண் தொகுப்பாளர் ஐஸ்வர்யா, மேடையிலேயே மாலையை கழட்டி வீசி எறிந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான், கூல் சுரேஷுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர் சார்பாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும் மன்னிப்புக் கேட்டும் வீடியோ வெளியிட்டார் கூல் சுரேஷ்.
“என்னால் நடித்து பெரியா ஆளா வர முடியலை. அதனால ஏதோ கிறுக்குத்தனமா சில வேலைகளை செஞ்சு பிழைப்பை ஓட்டிட்டிருக்கேன். நான் பண்றது எல்லாமே ஃபன்னுக்குதான். அப்படி விளையாட்டா செஞ்சதுதான் இப்படி மாலை போட்டதும். ஆனா ஒரு பெண்ணின் மனதை காயப்படுத்திட்டேன் நினைக்கிறப்ப உண்மையாவே வருத்தப்படுறேன். உண்மையாவே நான் பண்ணது மிகப் பெரிய தவறுதான். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறுகள் செய்யமாட்டேன்” என பேசியிருந்தார்.
இதுகுறித்து சரக்கு இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ”அந்த சம்பவத்தை நினைச்சா இன்னும் அதிர்ச்சியா இருக்கு. அதுவும் என் தோள்பட்டையைப் பலவந்தமா அழுத்தி, யாரும் எதிர்பார்க்காத நொடியில அப்படி நடந்துக்கிட்டார். ஒருத்தர் பொதுமேடையில திடீர்னு இப்படி நடந்துகிட்டா என்னங்க செய்ய முடியும்? நாம ஏன் பளார்னு அந்தாளு கன்னத்துல ஒரு அடியாவது கொடுக்காம விட்டுட்டோம்னு இப்ப நினைக்கிறேன்.”
“கிறுக்குத்தனம் பண்றதுல கூட சில எல்லைகள் இருக்கு. தனிப்பட்ட யாரையும் அது பாதிக்காதபடி இருக்கணும். இதுக்கு முன்பும் ஒரு நிகழ்ச்சியில என்னிடம் வம்பு பண்ணியிருக்கார் கூல் சுரேஷ். பொதுவா அவரோட நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காதுங்கிறது தான் நிஜம். அதனால இவரை மேடைக்குக் கூப்பிடறப்ப வெறுமனே நடிகர் கூல் சுரேஷ்னு கூப்பிடுவேன். ஆனால், அப்படிக் கூப்பிடக் கூடாது; எனக்கு ‘யூ டியூப் சூப்பர் ஸ்டார்’னு பட்டம் இருக்கு, அதைச் சொல்லி கூப்பிட மாட்டீங்களா’ன்னு சொல்லிருக்கார்.”
“அதனால் தான் இந்தமுறை மாலையை வேணும்னே என் கழுத்தில் போட்டிருப்பார்னு தோணுது. இன்னொருமுறை இந்த மாதிரி நடந்துகிட்டா கன்னத்துல ஒரு அடியாவது கொடுத்திடுவேன், இல்லாவிட்டால் போலீஸில் புகார் கொடுக்கலாம்ன்னு இருப்பதாக” ஐஸ்வர்யா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா, “பொதுமேடையில் திடீர்னு இப்படி நடந்துகிட்டா என்ன செய்ய முடியும்? நாம ஏன் பளார்னு அந்தாளு கன்னத்துல ஒரு அறை கொடுக்காம விட்டுட்டோம்னு இப்ப நினைக்கிறேன்” என ஓபனாக தனது கருத்தைத் தெரிவித்தார்