தமிழக – கேரளா பெரியார் புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, கடந்த மாதம் 27-ம் தேதியில் தமிழக வனப்பகுதியில் புகுந்து தேனி மாவட்டம் கம்பம் நகரில் புகுந்தது. இதையடுத்து கம்பம் நகரில் உள்ள தெருக்களிலும், சாலைகளிலும் ஓடி அட்டகாசம் செய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
அவ்வாறு யானை ஓடும்போது அந்த வழியாகச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், பயத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதியில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர், இந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர் அவர்கள் எதிர்பார்த்த நேரத்தில் அந்த அரிக்கொம்பன் யானையைப் பிடித்து மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர், வனத்துறையினர் 3 கும்கி யானைகளின் உதவியுடன் சேர்த்து இந்த மயக்கத்திலிருந்த அரிக்கொம்பன் யானையை, வனத்துறைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனமான பிரத்தியேக லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டன்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள, மேல கோதையாறு பகுதியில் அரிக்கொம்பன் யானை வனத்துறையினால் விடப்பட்டது எனத் தகவல் வந்தது.
- Advertisement -