பொதுவாகக் கைக்குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மூலமாகவே உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிடும். ஆறு மாதத்திற்குப் பிறகு, குழந்தைக்கு போதுமான குடிநீரைத் தரவேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படாது. தாய்மார்கள் அவ்வப்போது தண்ணீர் கொடுத்துப் பழக்க வேண்டும். அதைப்போல், 3 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கு, அவர்களது தேவைக்கு ஏற்ப அவ்வப்போது குடிநீரைக் குடிக்கச் சொல்லிப் பழக்கப்படுத்தலாம்
அதேசமயம், வளரும் குழந்தைகளின் உடலுக்குத் தண்ணீரைக் கிரகிக்கும் சக்தி அதிகம் உண்டு.ஆகவே, 6 முதல் 10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறுவர் / சிறுமியர் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். இதே கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரியும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், ஒரு நாளைக்குச் சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள், டிரெயினரின் வழிகாட்டுதலின் படி ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.
அதைப்போல், வயதாக ஆக, பசி, தாகம் ஏற்படும் உணர்வு குறையும். வெயில் காலங்களில் வயதானவர்கள் கண்டிப்பாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 70 வயதுக்கு மேல் தாகம் எடுக்கும் உணர்வு அவ்வளவாக இருக்காது. அவர்கள் தாகம் எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -