கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் புதிதாக 2000 நோட்டுகளை வெளியிட்டு இருந்தது இந்திய ரிசர்வ் வங்கி. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டில் ரூ.2000 நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும், அப்போது சுமார் 6 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்திலிருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியது.
பின்னர் கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக ஆர்.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்து இனி எந்த பண பரிவர்த்தனையும் நடக்கக் கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்ததை ஒட்டி, ரூ 2000 நோட்டுகள் மக்களிடம் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும், அதற்கான கால அவகாசமும் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படுவதைக் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ”500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள் இருப்பதாகவும், சமீபத்தில் நடந்த கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் என ட்வீட் செய்துள்ளார்.
- Advertisement -