கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10 ஆம் தேதியில் வாக்கு பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 13 ஆம் தேதியில் நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, அங்கு யார் முதலமைச்சர் ஆவார் என கேள்வி எழுந்தது. இதை முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, டி.கே. சிவகுமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதனால், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களுருவில் நடைபெற்றது. அதில் கட்சியின் மேலிடமே யார் முதல்வர் என தேர்வு செய்யட்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கட்சி மேலிடம் இந்த இருவரையும் நேற்று டெல்லி அழைத்து உள்ளது. இதில் சித்தராமையா அவர்கள் நேற்றே டெல்லி சென்றார். ஆனால், டி.கே .சிவகுமார் உடல்நிலை காரணமாக செல்லவில்லை என்றார். பின்னர் நேற்று மாலையில் டெல்லி செல்லவுள்ளதாக தெரிவித்தார்
இந்நிலையில், இன்று டெல்லிக்கு புறப்படும் முன்பு, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர், ” கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 135 பேரும் ஒரே அணியில் ஒற்றுமையாக உள்ளோம். யாரையும் நான் பிளவுபடுத்த விரும்பவில்லை, யார் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மாநில தலைவர் என்ற முறையில் பொறுப்பாக செயல்படுவேன்” என்றார்.
மேலும், அவர் ”நான் யாரையும் முதுகில் குத்த மாட்டேன், யாரையும் மிரட்டி ஆதாயம் அடைய மாட்டேன், அந்த கலாசாரம் என்னிடம் இல்லை, மாற்று கட்சிக்கு நான் ஏன் செல்ல வேண்டும்? ஒருபோதும் அப்படி செல்ல மாட்டேன். அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் போகிறோம்; மோசமான பெயருடன் நான் சாக விரும்பவில்லை” என பேட்டியளித்துள்ளார்.