பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை காலமானார், பிரபல நடிகருக்கு இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன. சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ மனைக்குக் கொண்டு வரப்பட்ட மயில்சாமி அங்கு மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் மிமிக்ரி கலைஞரும் தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகரும் ஆவார்.
நேற்று காலை எல்லோருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது நடிகர் மயில்சாமியின் மரணம். காமெடி நடிகராக சிரிக்க வைத்தவர் என்பதையும் தாண்டி அவர் ஒரு நல்ல மனிதராக, இரக்க சுபாவம் உள்ளவராக, தன்னிடம் உள்ளதை இல்லாதவர்க்கு கொடுப்பவராக வாழ்ந்து வந்ததால்தான் அவரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
1985ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். துவக்கத்தில் மிமிக்ரி கலைஞராக பலரையும் மகிழ்வித்தவர். அப்படித்தான் போராடி சினிமாவுக்குள் வந்தார். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனுஷுடன் இவர் நடித்த படிக்காதவன், தேவதையை கண்டேன் ஆகிய படங்களும், விவேக்குடன் இணைந்து இவர் காமெடி செய்த தூள் உள்ளிட்ட சில படங்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நிரூபித்திருப்பார்.
எந்த நடிகரிடமும் இல்லாத இரக்ககுணம் அவருக்கு உண்டு. அதனால்தான் அவரை பலருக்கும் பிடித்தது. ஒரு லட்சம் சம்பளம் வாங்கினால் அதில் 5 ஆயிரம் வீட்டுக்கு போகும். மீதி பணத்தை அப்படத்தில் நடிக்கும் சின்ன சின்ன நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கொடுத்துவிடுவார். எம்.ஜி.ஆரின் வள்ளல் குணத்தில் இம்பரஷன் ஆன மயில்சாமி தன் வாழ்நாள் முழுவதும் தன்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும், தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்யவேண்டும் என நினைத்து வாழ்ந்து வந்தவர்.
தன்னிடம் இல்லையெனில் விவேக், சத்தியராஜ் உள்ளிட்ட பலரிடமும் வாங்கி மற்றவர்களுக்கு உதவியுள்ளார். குறிப்பாக ஏழை கலைஞர்களின் படிப்பு செலவுக்கு உதவியவர். மயில்சாமி வீட்டுக்கு சென்றால் கண்டிப்பாக உதவி கிடைக்கும் என்கிற நிலை இருந்தது. இத்தனைக்கும் மயில்சாமி கவுண்டமணி, விவேக், வடிவேலு போல முன்னணி காமெடி நடிகர் கிடையாது. அவருக்கு கிடைக்கும் சம்பளமே குறைவுதான். ஆனால், அதையும் எல்லோருக்கும் கொடுத்தார் மயில்சாமி. அதனால்தான் அவரின் மரணம் பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.
2004ம் ஆண்டு சுனாமியால் தமிழகம் பாதிக்கப்பட்ட போது, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். இதைக்கேள்விப்பட்ட மயில்சாமி மும்பை சென்று அவரின் வீட்டை கதவை தட்டி எம்.ஜி.ஆர் தனக்கு பரிசாக வழங்கிய தங்கச்செயினை அவருக்கு கொடுத்துவிட்டு வந்தார். கொரோனா காலத்தில் பலருக்கும் சோறுபோட்டவர். பழகும் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.
மாரடைப்பில்தான் மயில்சாமி இறந்துள்ளார். இதற்கு முன்பே அவருக்கு பலமுறை நெஞ்சுவலி வந்துள்ளது. ஆனால், அதை அவர் கண்டுகொள்ளவில்லை. நண்பர்கள் சொல்லியும் சரியான சிகிச்சையை அவர் எடுக்கவில்லையாம். ஒருமுறை இதய அறுவை சிகிச்சையும் செய்துள்ளார்.
மூத்த திரைப்படத் தயாரிப்பாளர்-நடிகர் கே.பாக்யராஜின் ‘தாவனி கனவுகள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மயில்சாமி, தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்தார். தூள், வசீகரா, கில்லி, கிரி, உத்தமபுத்திரன், வீரம், காஞ்சனா, மற்றும் கண்களால் கைத்து செய் ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் சில, அவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.அவர் ஒரு பாராட்டப்பட்ட மேடை கலைஞர், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நாடக கலைஞராகவும் இருந்தார். சென்னையில் சன் டிவியில் அசத்தபோவது யாருக்கு வழக்கமான விருந்தினராகவும் இருந்தார். இவர் சமீபத்தில் நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷம் மற்றும் தி லெஜண்ட் போன்ற படங்களில் நடித்தார்.