வங்கக்கடலில் உருவான மாண்டூஸ் புயல் தீவிர புயலாக மாறி, மணிக்கு 12 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்டூஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி, தற்போதைய நீர்மட்டம் 17 அடியாக உள்ளது.
குடிநீர் தேவைக்காக இதுவரை 159 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரிகளில் இருந்து உபரி நீர் இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. அதன்படி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.
உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.