இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பினர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட மீனவர்கள் குழு கடந்த மாதம் 2 படகுகளில் கடலுக்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் இருந்தபோது இலங்கை கடலோர காவல்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து, படகுகளை கைப்பற்றி கடல் எல்லையை தாண்டியதாக கூறி அனைவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை அரசு சிறையில் அடைத்தது.
அதைத்தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் இந்திய தூதரகத்தின் உதவியுடன் மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரகம் அவர்கள் அனைவருக்கும் அவசர விசா ஏற்பாடு செய்து, செவ்வாய்கிழமை ஏர் இந்தியா விமானத்தில் கொழும்பில் இருந்து சென்னை திரும்பினர்.
விமான நிலையத்தில், மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்தனர். பாஜக சார்பில் சசிகலா புஷ்பாவும் விமான நிலையம் சென்று மீனவர்களை வரவேற்றார்.