மடிப்பாக்கம் அருகே மின்விளக்கு கம்பத்தை செவ்வாய்க்கிழமை தொட்டபோது மின்சாரம் தாக்கி மென்பொருள் பொறியாளர் உயிரிழந்தார்.
இறந்த ராமநாதபுரத்தை சேர்ந்த இளவரசன் (33) பள்ளிக்கரணையில் தங்கி தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு இளவரசன் தனது நண்பர் அலெக்சாண்டருடன் வேளச்சேரி மெயின்ரோட்டில் உள்ள சாலையோரக் கடையில் இரவு உணவு சாப்பிடச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இளவரசன் தவறுதலாக சாலையில் இருந்த மின்விளக்கு கம்பத்தை தொட்டதாகவும், சிறிது நேரத்தில் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். உடனடியாக பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசன் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற மடிப்பாக்கம் போலீஸார், சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.