தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET) தேர்ச்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் பணியிடங்களை வழங்கக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை விரைந்து வழங்க வேண்டும், மறு நியமன போட்டித் தேர்வு விதியை நீக்கக் கோரி போராட்டம் நடத்தப்படுகிறது.
TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது:பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகும்.எங்கள் போராட்டக்குழுவுடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லையெனில் தொடர் போராட்டமாக மாறும்.ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், கல்வியின் தரம் குறைந்துள்ளது. போதிய ஆசிரியர்கள் இல்லை என்றால் மாணவர்கள் எப்படி பள்ளிகளில் சிறப்பாக செயல்பட முடியும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. போராட்டத்திற்கு எம்என்எம் கட்சி, நிர்வாகிகள் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.