அஜித் இயக்குனர் சாச்சியிடம் தனக்காக கதை கேட்டதாக இப்போது சாச்சியின் மனைவி தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்த படத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தார். பிரபல திரைக்கதை ஆசியரான சாச்சி இயக்கி இருந்தார். மிகச்சிறந்த பாராட்டுகளையும் வசூலித்தது இந்த திரைப்படம். சில தேசிய விருதுகளையும் வென்றது.
இந்த படத்தின் இயக்குனர் சாச்சியின் அடுத்த படங்கள் மீதான ஆர்வம் அதிகமாக இருந்த நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் இப்போது இயக்குனர் சாச்சியோடு அஜித் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதாக சாச்சியின் மனைவி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் வெளியான போது அஜித் சாச்சியை அழைத்தார். தனக்கு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கூறி அய்யப்பனும் கோஷியும் படத்தை வெகுவாகப் பாராட்டினார். சாச்சி தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளதால் விரைவில் சென்னையில் வந்து சந்திக்கிறேன் எனக் கூறினார். ஆனால் அந்த சந்திப்பு நடப்பதற்குள் சாச்சி மறைந்துவிட்டார்” எனக் கூறியுள்ளார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.