பிக்பாஸ் பிரபலம் நிரூப் ஹீரோவாக களம் இறங்கியிருக்கும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழில் இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கிறது. மேலும், ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. மேலும், ஆரம்பத்திலேயே இந்த முறை நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களை களம் இறக்கி இருந்தார்கள். அதிலும் இந்த முறை ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருந்தார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பலர் கலந்துகொண்டனர். அதில் நிரூப்பும் ஒருவர். நிரூப் நந்தகுமார் தொழிலதிபர் ஆவார்.
இவர் பெங்களூரில் ஒரு ஆட்டோமேஷன் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். பின் சென்னையிலும் க்ளவுட் கிச்சன் நடத்தி வருகிறார். இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இதனால் பல ஆடிசனுக்கு சென்றிருக்கிறார். ஆனால், நேரில் செல்லும் போது இவருடைய உயரத்தை பார்த்துவிட்டு நடிக்க வைக்க முடியாது என்று சொல்லி நிராகரித்து விடுகிறார்கள். பின் சினிமாவில் எப்படியாவது நுழைய வேண்டும் என்பதற்காக தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.
பின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் நிரூப் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று இருந்தார். ஆனால், அவரால் வெற்றி அடைய முடியவில்லை. பின் இவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். இதில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிரூப் பேட்டி அளிப்பது ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாக இருந்தார்.
இந்நிலையில் நிரூப் ஹீரோவாக களமிறங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின் வாய்ப்பு அளிப்பது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் தற்போது நிரூப் இணைந்து இருக்கிறார். இவர் தற்போது ரெயின்போ என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி இருக்கிறார். இந்த படத்தை வசந்த் ராமசாமியின் ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ் சார்பில் வசந்த் ராமசாமி மற்றும் இயக்குனர் எஸ்.பி.ஹோசிமினின் ஹோசிமின் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
ஹோசிமினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் கைபா பட்டாபிராம் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தில் சிம்ரான் ராஜ் உள்ளிட்ட ஏழு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். மற்ற ஹீரோயின்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இவர்களுடன் மைம் கோபி, மனோபாலா, சார்லஸ் வினோத் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வினோத் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சுபாஷ் ஆனந்த் இசை அமைக்கிறார். இது ஃபேன்டஸி படமாக உருவாகிறது. இந்த படத்திற்கான பூஜை நேற்று தொடங்கி இருக்கிறது. அதற்கான புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.