நடிகர் விஜய் நடித்த படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்த தியேட்டர் நிர்வாகம், 7,000 ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ல், சென்னை செம்பியம், சத்தியநாராயணன் சாலையைச் சேர்ந்தவர் தேவராஜன், அயனாவரம், பாரதி நகரில் உள்ள, கோபி கிருஷ்ணா ருக்மணி தியேட்டரில், நடிகர் விஜய் நடித்த, பிகில் படம் பார்க்க போனார்.இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ததில், 223.60 ரூபாய் கட்டணம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து அவர், நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, 113 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது கட்டண விதிகளுக்கு முரணானது. கூடுதல் கட்டணம் வசூலித்தது குறித்து, தியேட்டர் அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் புகார் அளித்தும், எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை.கூடுதலாக வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்துடன், 4.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர், சென்னை மாவட்ட வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில் தியேட்டர் தரப்பில் ஆஜராகவில்லை.இந்த வழக்கில், நீதிபதி வினோபா, நீதித் துறை உறுப்பினர் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவு:தியேட்டர் நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபட்டதால், சேவை குறைபாடு உள்ளது. சினிமாவுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையுடன், 5,000 ரூபாய் இழப்பீடு, 2,000 ரூபாய் வழக்கு செலவை, மனுதாரருக்கு, தியேட்டர் நிர்வாகம் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.