கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ திரைப்படத்தை, எஸ்.பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து அதே கூட்டணி தற்போது இரண்டாவது படத்தில் இணைந்துள்ள நிலையில், இந்த படத்துக்கு ‘அகிலன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் துறைமுகம் சார்ந்த ஒரு கேங்ஸ்டர் படம் என கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் பெரும்பாலான காட்சிகளை தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இயக்குனர் கல்யாண் படமாக்கி முடித்துவிட்டார். படம் 1980 மற்றும் நிகழ்காலம் போன்ற இரண்டு கால கட்டங்களில் நகரும் கதைக்களமாக படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்த நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படத்தை இரண்டு மாதங்கள் தள்ளி நவம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் விஷாலின் ‘லத்தி’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.