பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்த நிலையில், திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடிப்பில் தெலுங்கு படம் ஒன்றை இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே. சூர்யாவை ஒப்பந்தம் செய்த்துள்ளார்கள்.
இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில், தற்போது ‘RC 15’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்துக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பரிச்சயமான தலைப்பை வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதால் ‘அதிகாரி’ என்று தலைப்பு வைக்க பரிசீலனை செய்துவருவதாக கூறப்படுகிறது.