ஒரு பல்துறை இயக்குனராக மட்டுமல்லாமல், மறைந்த தருண் மஜும்தார் திறமையைக் கண்டறிவதில் திறமையானவர். மீண்டும் மீண்டும், அவர் பல நடிகர்களின் வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் மீண்டும் தொடங்கினார்.
பெங்காலி சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் தருண் மஜூம்தார். இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அதில் ‘பாலிகா பாது’, ‘ஸ்ரீமான் பிருத்விராஜ்’, ‘தாதா கீர்த்தி’, ‘வல்பசா வல்பசா’, ‘ஆலோ’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
இவர், 4 தேசிய விருதுகள், 7 பிஎஃப்ஜெஏ விருதுகள், 5 பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஒரு ஆனந்தலோக் விருதுகளைப் பெற்றுள்ளார். 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ‘அதிகார்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி இருந்தார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டதையடுத்து கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை காரணமாக அவருக்கு அங்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அவர் உடல்நிலை நேற்று மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவர் மறைவு, திரைத்துறையினருக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். மஜும்தார் ஒரு பன்முகத் திரைப்பட இயக்குநராகவும், சிறந்த சமூக திரைப்படங்களை இயக்கிய இயக்குநராக விளங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.