நீரிழிவு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட யோகா மிகச் சிறந்த தீர்வினை வழங்கக்கூடியது.
அதிலும், சில யோகாசனங்கள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு, அதன் அறிகுறிகளில் இருந்தும் விடுபட உதவும்.
அந்த வகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய மிக சுலபமான யோகாசனம் ஒன்று உள்ளது.
அது தான் லெக் அப் வால் போஸ் அல்லது விபரித கரணி. சுவற்றின் மேல் கால்களை நேராக நீட்டியபடி படுப்பது தான்.
அதை பற்றி தான் தற்போது தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த ஆசனத்தை எப்படி செய்வது?
முதலில் வலது புறமாக சுவர் இருக்கும் படி தரையில் அமர்ந்து, கால்களை நீட்டிக் கொள்ளவும்.
இப்போது மெதுவாக, இரண்டு கால்களையும் சுவற்றின் மீது நீட்டிய படி தூக்கவும்.
தூக்கும் போது அப்படியே தரையில் படுத்துக் கொள்ளவும்.
கால்கள் நேராக சுவற்றின் மீது 90 டிகிரி கோணத்திலும், உடம்பு தரையோடு தரையாகவும் இருக்க வேண்டும்.
கைகளை தரையின் மீது நீட்டி வைத்துக் கொள்ளவும்.
இதே நிலையில் ஒரு 15 நிமிடங்களுக்கு இருந்தால் போதும்.
அந்த 15 நிமிடமும் மூச்சை நன்கு இழுத்து விட மறவாதீர்கள்.
பின்னர், கால்களை மடக்கி, மார்போடு சாய்த்து பிடித்துக் கொண்டு பழைய ஆரம்ப நிலைக்கே உருண்டு வந்து உட்கார்ந்திடவும்.
யோகாசனம் உடல் உறுப்புகளைத் தூண்டுவதோடு, உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்கிறது.
இதனால் நாளமில்லா அமைப்பில் சமநிலையைப் பெற்றிடவும் உதவுகிறது.
இதனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சுவற்றின் மேல் தூக்கி வைக்கும் இந்த ஆசனம், தலைகீழ் நிலை மறுசீரமைப்பாகும்.
இது உங்கள் உடலை முற்றிலுமாக ஓய்வெடுக்க அனுமதிக்கிறது.
மேலும், உங்கள் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்த ஹார்மோனின் அளவையும் குறைக்கிறது.
பெரும்பாலான மக்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது கடினம் என்பதற்கு அவர்களின் மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.