தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பி ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெய்.
அந்த படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவியும் என நினைத்த அவருக்கு பெரியளவில் வாய்ப்புகளே கிடைக்கவில்லை. பகவதி படத்தில் என்ன சேட்டை செய்தாரோ தெரியவில்லை நடிகர் விஜய்யும் தனது அடுத்தடுத்த படங்களில் அவரை கிட்டவே சேர்க்கவில்லை.
2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் கும்பலோடு கும்பலாக சென்னை 600028 படத்தில் நடித்த ஜெய்க்கு அதன் பிறகு தான் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.
சசிகுமார் இயக்கி நடித்து 2008ல் வெளியான சுப்ரமணியபுரம் ஜெய்க்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்த படத்திற்கு பிறகு கூட அப்படியொரு கதாபாத்திரத்தில் இன்னமும் ஜெய் நடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சரோஜா, கோவா, சென்னை 600028 இரண்டாம் பாகம் என தொடர்ந்து வெங்கட் பிரபு கேங்குடனே சுற்றி வந்தார் நடிகர் ஜெய்.
2011ம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும் படம் மீண்டும் ஜெய்க்கு ஒரு நல்ல பாதையை சினிமாவில் அமைத்துக் கொடுத்தது. அதன் பின்னர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நடித்த ராஜா ராணி படத்தில், அப்பான்னா மட்டும் தாங்க பயம்.. மத்தபடி ஐ லவ்யூங்க என நயனிடம் லவ் சொல்லும் காட்சிகளிலும் கடைசியில் வரும் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்து அசத்தி இருப்பார். ஆனால், அதன் பிறகும் நடிகர் ஜெய் நடித்த பல படங்கள் சொதப்பிய நிலையில், கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட்டே ஆகி விட்டார்.
இந்நிலையில், சுந்தர். சிக்கு வில்லனாக பட்டாம்பூச்சி படத்தில் நடித்துள்ள நடிகர் ஜெய் பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
அதில், பகவதி படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கவே இல்லையே ஏன்? என தொகுப்பாளர் கேட்க, அந்த சோகக் கதையை ஏன் கேட்கிறீங்க என மனுஷன் புலம்பித் தள்ளி உள்ளார்.
பல முறை நடிகர் விஜய்யிடம் ஒரு சின்ன ரோலாவது கொடுங்கண்ணா நடிக்கிறேன்னு கேட்டேன், ஆனால், நீ தான் ஹீரோவாகிட்டியே அப்புறம் எதுக்கு என் கிட்ட சான்ஸ் கேட்கிறன்னு துரத்தி அடித்துள்ளாராம்.
மேலும், ஒருமுறை ஜெய்க்கு அட்வைஸ் சொன்ன விஜய் ஒரு ஹீரோவால் மூன்று ஃபிளாப்களை தாங்க முடியும், 4வது மற்றும் 5வது படத்தில் வெயிட்டா செஞ்சு ஹிட் கொடுத்துடணும், அது மிஸ்ஸான அவ்ளோ தான் தம்பி என்றும் அட்வைஸ் கொடுத்து அனுப்பியதாகவும் எந்த படத்திலும் ஒரு சின்ன கேமியோ ரோல், அல்லது அட்மாஸ்பியராக கூட தன்னை பயன்படுத்த அனுமதிக்கவில்லை என மனக் குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.